ஐயப்பன் விரத விதிமுறைகள் மற்றும் 18 படிகளின் சிறப்பு..!

ஐயப்பன் விரத விதிமுறைகள் மற்றும் 18 படிகளின் சிறப்பு..!



சுவாமி சரணம்..! ஐயப்ப சரணம்..!


சபரிமலை ஐயப்பன் சுவாமிக்கு மண்டல விரதம் இருந்து பலபேர் இருமுடி கட்டி கோவிலுக்கு செல்லும் வேண்டுதல் உடையவர்களாக இருப்பார்கள். பலபேர் புதியதாக மாலை போடுபவர்களாகவும் இருப்பார்கள்.


சபரிமலை செல்ல ஐயப்பன் விரத விதிமுறைகள் எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று பலருக்கும் தெரியாமல் இருக்கும். அது என்னவென்று பார்க்கலாம் வாங்க..!


விதிமுறைகள் :


ஐயப்பன் சுவாமிக்கு முதல்முறையாக மாலை அணியும் பக்தர்களை கன்னி சுவாமி என அழைப்பார்கள்.



சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருந்து 18 முறை தொடர்ச்சியாகச் சென்றவர்கள் குருசாமி எனப்படுவார்கள் (ஒரே ஆண்டில் 18 முறை செல்லக்கூடாது). இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கலாம். சில இடங்களில் மூன்று முறை

சென்றாலோ, சில இடங்களில் ஐந்து முறை சென்றாலோ அவர்கள் குருசாமியாக கருதப்படுகிறார். இந்த நடைமுறை ஒவ்வொரு ஊரை பொறுத்து மாறுபடும்.



அவ்வாறு ஒருவரை குரு சுவாமியாய் ஏற்று தாய், தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலை அணிதல் வேண்டும்.


அவரவர் வசதிக்கேற்ப குருவிற்கு தட்சணை கொடுத்து குருவின் அனுக்கிரகத்தை பெறுதல் வேண்டும். கொடுக்கும் தட்சணை ஒரு ரூபாய் ஆனாலும் குரு, ஐயப்பனே தந்ததாக அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


கார்த்திகை முதல்நாள் மாலை அணிதல் வேண்டும். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருத்தல் வேண்டும். காலை உணவை விடுத்து மதிய உணவை ஐயப்பனிற்கு நிவேதனம் செய்து உண்ண வேண்டும். மாலை பால், பழம், பலகாரம் உண்ணலாம்.



விரதகாலத்தில் மிக இறுக்கமாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்கக்கூடாது. திருமணமானவர்கள் தாம்பத்திய வாழ்வில் (இந்த நாட்களில் ஈடுபடக்கூடாது). மனதால் ஐயப்பனை மட்டும் நினைத்து அவன் பாதத்தை சரணடைய வேண்டும்.


ருத்திராட்சம் அல்லது துளசிமாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி, அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். துணை மாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும்.


விரதகாலத்தில் கருப்பு, நீலம், பச்சை நிறமுள்ள ஆடைகளை அணியவேண்டும். கன்னி சுவாமிகள் கருப்பு மட்டும் தான் அணிய வேண்டும்.


விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல், முகச்சவரம் செய்தல் என்பன கூடாது. காலணி, குடை, மழைக்கு போடும் கவசம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல், பொய் பேசுதல், மாமிசம் உண்ணுதல், கோபம் கொள்ளுதல், கடும் சொற்கள் பேசுதல் என்பன கூடாது.


விரதகாலத்தில் எவருடன் பேச நேர்ந்தாலும் பேச தொடங்கும் போதும், பேசி முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்றே கூறவேண்டும். மாலையணிந்தால் விரதம் பூர்த்தியாகும் முன்னர் அதை எக்காரணம் கொண்டும் கழற்ற கூடாது. 


நெருங்கிய உறவினரின் இறப்பால் தீட்டு நேர்ந்தால் மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டு விடவேண்டும். பின்னர் மறுவருடம் தான் மாலை அணிய வேண்டும்.


விரதகாலத்தில் பகலில் தூங்கக்கூடாது. இரவில் பாய், தலையணை என்பனவற்றை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தூங்க வேண்டும். 


18 படிகளின் சிறப்பு:


சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது, 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பன் சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர். சபரிமலையில் உள்ள 18 படிகளுக்கும் ஓர் அர்த்தம் உண்டு. அந்த படிகள் ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிக்கும். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.


முதல் படி கண்களை குறிக்கும். இது நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும்.


இரண்டாம் படி மூக்கை குறிக்கும். சுத்தமான காற்றை மட்டும் சுவாசிக்க வேண்டும்.


மூன்றாம் படி காதுகளை குறிக்கும். நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டும்.


நான்காம் படி வாயைக் குறிக்கும். நல்ல சொற்களைப் பேச வேண்டும்.


ஐந்தாம் படி உணர்வை குறிக்கும். எப்போதும் மணி மாலையை மட்டுமே தொட வேண்டும்.


ஆறில் இருந்து பதிமூன்று வரை உள்ள எட்டு படிகளும் அஷ்டரகஸ் என்பதைக் குறிக்கும். இது காமம், குரோதம், பேரார்வம், மோகம், போட்டி, பொறாமை, தற்பெருமை ஆகியவற்றைக் குறிப்பதாகும்.


பதினான்காம் படி சாத்வீகம் என்பதையும், பதினைந்தாம் படி ராஜஸம் என்பதையும், பதினாறாம் படி தாமஸம் என்பதையும் குறிக்கும். இம்மூன்றும் மூன்று குணங்கள் ஆகும். சோம்பலை விட்டு விட்டு, ஒருவர் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கக்கூடியது இந்த மூன்று படிகள்.


பதினேழாம் படி வித்யா என்பதைக் குறிக்கும். வித்யா என்றால் அறிவு ஆகும்.


பதினெட்டாம் படி அவித்யா என்பதைக் குறிக்கும். மோட்சத்தைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கும்.


சுவாமியே சரணம் ஐயப்பா..!


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.